புத்தர் கர்த்தர் கிருஷ்ணர் அனைவர் கை அணைப்பில் என்றும் நீ இருப்பாய் அன்பு ஆட்டுக்குட்டி.
அனைத்து போதனைகளையும் தோளிலும் மார்பிலும் தொங்கிக்கொண்டு கேட்டனையோ? கேட்டும் எதுவும் கற்றனையோ ? உன் அச்சம் முதலான குணங்களை மாற்றிக்கொண்டாயா..அன்பே வடிவாய் மாறினாயா..
அப்படியிருந்தும் நீ கதற கதற கருப்பணசாமிக்கும் அலற அலற ஐயனார் சாமிக்கும் பலியாவதே ஏன்? நீ பெற்ற ஞான ஒளி உன்னை காக்கவில்லையா
நீ பெற்ற ஞானம் உன்னை அறிவில் தெளிவைத் தரவில்லை அறிவீனத்திற்கு ஆட்டு மூளை என சொல்லக் காரணமும் என்ன?
மாதவன் மடியில் கிடந்து வளர்ந்தாயே சங்கு சக்கரம் நிரந்தரமான அவன் கையில் தங்கியது போல் நீயும் தங்கிவிடுவாய் என் கருதினேன். வாசுதேவன் பிறந்ததே ஆயர்க் குலத்தில் அவனே அன்பான ஆயன் அப்படி இருந்தும் நீ மண்ணுலகில் மறுபடி மறுபடி தோன்றி மா வதைப் பட்டு இருக்கிறாய். என்ன மாயம் எது?
ஆட்டுக்குட்டியின் பதில்:
எத்தனை பேர் வந்தாலும் ...உலகிலுள்ள அத்தனை பேர் வந்தாலும்
ஞான ஒளியின் வடிவாக உலகிலுள்ள அத்தனை பேர் வந்தாலும் மகான்கள் தோன்றினாலும் அவர்களுடன் இணைந்து இருந்தாலும் தத்தம் நல்லது கேட்டதை ஆராய்ந்து கொள்ளவேண்டும் ஒரு நல் ஆசான் துணையோடு.
அப்போது புரிந்துவிடும்:
புத்தமும் கர்த்தரும் கண்ணனும் சொக்கனும் மொத்தமும் ஒன்றே தான்
புத்தியில் உரைத்திடும்.....வெண்பனி
சித்தராய் குட்டி ஆடு கூறி முடித்தது.
No comments:
Post a Comment