Tuesday, September 26, 2017

நமக்கென்ன என்று நாம்....
புவனா கருணாகரன் பாட்டுக்கு* எசப்பாட்டு ..
சிக்கல் விழுந்த நூல்கண்டு
எக்காலம் விடியுமென்று தெரியாது - எத்
திக்கில் எங்கு தொடங்கி
சிக்கலின் நுனி தேடுவதென்று
மக்களுக்கும் தெரியவில்லை
எத்தித் திரியும் கூட்டத்திற்கோ
புத்தி முழுதாய் மூழ்கி போனது
கத்தி கபடா தூக்கியேனும் - ஊர்
சொத்து பூரா சுருட்டிட வேணும்
கத்தி பேச நாதியில்லை
கத்தி நியாயம் கேக்குறவனை
குத்தி கொலை செஞ்சாலும்
பத்திரமாய் எட்டிப் பார்க்காத
சித்தி முதல் சீரியல் பார்க்கும் கூட்டம்
சித்தம் கலங்கி சிதறி போச்சு
மொத்தக் கதை வீணாப் போச்சு
எத்தைத் தின்னால் நமக்கெல்லாம்
சித்தம் தெளியுமுன்னு சொல்லுங்க
சத்தமா...செவிடன் காதுல சங்கு மாதிரி

*புவனாவின் கவிதை:

நமக்கென்ன என்று நாம்....

(கவிதையல்ல குமுறல்)


இயற்கை சுரக்கும் காவேரி 
தடுத்து முடக்குதொரு 
சதிக் கூட்டம்
தட்டி கேட்க துப்பில்லாமல் 
தூங்கி விழிக்கிறோம் 
நாம்
ஆத்தோர மணல் மொத்தம் 
கொண்டு போகிறதொரு
கொள்ளை கும்பல்
கண்டும் காணாதுபோல் 
கடந்து போகிறோம் 
நாம்

மீதேன் எடுக்கிறதொரு
கார்பொரேட் கம்பெனி
அன்றைய நெற்கழஞ்சியம் 
மாறுது இன்று தருசாக
கதிராமங்களம் கதறினாலென்ன
சுகமாய் வாழ்கிறோம் 
நாம்

பெப்சியென்று ஓர் உயிர்கொல்லி
தானமாய் எடுத்துக் கொண்டது 
தாமிரபரணி
நீர்- விவசாயி பிரச்சனையென 
குழாயில் தாகம் தீர்கிறோம்
நாம்

கடல் போன மீனவர்
வேட்டையாடப்பட்டால் 
நமக்கென்ன என்று 
நாம்

நெசவாளி வரியினால்
நொடுக்கப்பட்டால் 
நமக்கென்ன என்று 
நாம்

விவசாயி கடனினால்
நசுக்கப்பட்டால் 
நமக்கென்ன என்று 
நாம்

கல்வி கனவு களவு போய்
ஏழை மாணவர் இறந்தால் 
நமக்கென்ன என்று 
நாம்

தளபதி, மன்னர், நட்சத்திரம், சூரியன் 
நாயகன், தலைவர், தலைவி, வேந்தர் 
என்றெல்லாம் முடிசூட்டி
உதவாத உதவாக்கரைகளை 
தலை மேல் வைத்தாடுகிறோம்
நாம்

அம்மா, சின்னம்மா, என்றழைத்து
கால் தொட்டு வணங்கி 
மண்சோறு தின்று 
அலகு குத்தி 
மந்தமாய் வாழுகின்றோம்
நாம்

அரசியல்வாதிகளுக்கு 
கைக்கூலி ஆகிறோம் 
நாம்

நடிகைகளுக்கு வலைதள 
படை திரட்டுகிறோம்
நாம்

இலவசத்திற்கும் காசுக்கும் 
ஓட்டுப் போட்டு
அரசாங்கம் முழுதும் 
அசிங்கங்களை அமர்த்திவிடுகிறோம் 
நாம்

நம்மை பற்றி மட்டுமே 
நினைத்து பார்க்கிறோம்

நம்மை சார்ந்தோரை மட்டுமே 
காத்து வருகிறோம்

நம்மை மட்டும் நாமே
உயர்த்தி கொள்கிறோம்

நமக்கென்ன என்று
என்றுமே
நாம்...

-புவனா கருணாகரன்

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...