Friday, May 5, 2017

காஸ்கோ வெண்ணை கிண்ணத்தில் காட்டுக்கோழி எண்ணத்தில் ..

கட்டி வெண்ணை காஸ்கோவில் வாங்கி
குட்டி கிண்ணத்திலிட்டு காய்ச்ச - வெண்ணை
உருகி ஓட ..உடனே கிடைக்காத
முருங்கைக் கீரைக்கு ஏங்கி
கருவேப்பிலை கொத்தொன்றை
மோருடன் திளைக்கச் செய்து
விரைந்து உருகிய வெண்ணெயுடன்
கரைந்த நிமிடங்கள் காத்து   - நெய்
விருந்தாய்  மணம் வீட்டை நிறைக்க
பொருமி பொங்கி வரும் திரவத்தில்
உருவிய கருவேப்பிலை களமிறங்க
படபடவென வெடித்து
சடசடக்கும் சத்தமது
காட்டுக்கோழி பேடையெழுப்பும்
ஒலியென கிளம்பி
மெல்ல அடங்கும் என
சொல்லிய சேதி
சங்க இலக்கிய
சங்கதியாய் எப்போதோ
எங்கோ படித்ததாய் நினைவு ..

காஸ்கோ வெண்ணை கிண்ணத்தில்  
காட்டுக்கோழி எண்ணத்தில் ..

அன்பு ஆட்டுக்குட்டி

கருப்பா ..அன்பு ஆட்டுக்குட்டி

பொறுப்பாக ..பசும்புல்லை ..
நறுக்குன்னு கடிக்கையிலே
நாலாப்பக்கம் ..
ஆளா விரட்டி ..
வேலிக்குள்ள வச்சதேனோ
வெள்ளைச்சாமியண்ணே ? - என்
கள்ளமில்லாக் கருப்பா - உன்
உள்ளமெல்லாம் வெளுப்பா ?
செல்லப் பிள்ளையா நான்
வளத்தேன் பாரு
நல்லபடி நீ பொழைக்க வேணுமடா .
வெட்டுப் பட்டு சாகும் கொடும
துட்டுக்காக நான் தரல
புள்ளக் குட்டி பார்க்க வார
விலங்கு காட்சி சாலைக்கு
வெள்ளனவே நீ போற ஆமா ..
பத்திரமா பொழச்சுக்கடா

சித்திரமா புள்ளைகளப் பாத்துக்கடா ..

கரையாத ஓவியங்கள்



சடசடத்த கோடை மழை
படபடப்பாய் மக்கள்  
பக்கத்து கூரைகளை நாட

நிறைமதி முகம் கண்டு.
உறைந்த நீயும் ..
சிறை பிடிக்கும் உன்
விழி காணாது நாணி
காற்றில் மிதக்கும் அவளும்
கரையா ஓவியமாய் ..
கனமழையில் ..

காதல் உள்ளவரை
கோடை மழையுண்டு ..
வாட வேண்டாம்
வையகத்தீரே !

பசுந்தோகை மயிலாக


பசுந்தோகை மயிலாக
விசும்பிடை மரங்களாட
பசுங்காட்டிடை பளிங்காய்
அசைந்தாடும் நீரோடை…- கவி
ஞானியவன்  பெருங்காதலுற்று  
காணி நிலம் வேண்டியதும் - இயற்கை
ராணியுனை  கண்டதனாலோ? நின்னையே
காற்று வெளியிடை கண்ணம்மாவாய்
கீற்று நிலவினில் கண்டு
தோற்றதுவும் இச்சோலைக்
காட்சியிலோ? மாக்கவியின்
நீட்சியாக மலர்ந்ததுவே
மாட்சியாக கவியிரண்டு

கண்ணனும் கன்றுக்குட்டிகளும்

கவிதை ஒன்று:

பளிங்கு நீர்
சலங்கை கால்
அலுங்காமல் கரை சேர்க்க
அலங்கார நாயகன்
கலங்கக் காரணம் ஏது ?


கவிதை இரண்டு:

கலங்காதோ  கரையோர
கண்மாய் நீர்
கால் வைத்து கலக்கிட்டால்?.
காத்திருந்தால் கலக்கம்
நீங்குமோ?
பளிங்காய் மாறுமோ?
என் மனக்கலக்கம்
நீங்கும் மட்டும் காத்திருப்பேன் எனக்
கதை சொல்லத்தான்
கன்றுடன் நீ .கரையில்
காத்து நின்றாயா? - என்
கண்ணா ! உள்ளம் கவர்க் கள்வா!



கவிதை மூன்று:

பருக நீர்க் கண்டு
பாய்ந்தோடிய கன்று
பதுமையாய் மாறியதேன் ?
பாதக் கமலம் பார்த்த பரவசமோ?


கவிதை நான்கு:

உன்னழகுப்  பட்டாடை
முன் நெற்றியில் பட்டாட
தன்  உச்சி பொன்னாக
தான்   மறந்து
தண்ணீர் துறந்து
உன்னைப் பருகும்
உத்தவக்  கன்றோ?

கவிதை ஐந்து

பத்து விரல் …
தத்தெடுத்த தண்ணீர்..
பாதம் கண்ட நீர்..
வேதம் உண்ட நீர்..
கீதத்தில் மயங்கிற்றோ
கீழிருக்கும் பசுங்கன்று?



கவிதை ஆறு:

பரதம்  ஆடிய நீர்
விரதம் இருந்து - இப்
பாத சேவை கண்டதுவோ?
பரதம் மறந்து
பரவசம் மிகுந்து
பசுங்கன்றுடன் சேர்ந்து
பர மோன நிலை நின்றதுவே.



கவிதை ஏழு :

கார்மேகக் காலிரண்டு
நீர்மேலே நிற்கையிலே
காட்டான் குளத்து நீர்
கருமுகிலாய் கலங்காத
காட்சியென்ன அற்புதமோ?
தகதகக்கும் தண்ணீருக்கு
தங்கக்  கொலுசும் உன் பொன்
அங்கவஸ்திரமும் காரணமன்று
நன்கிதனை நான் அறிவேன்.
மங்கா உன் மார்கழி மாத
அருளன்றோ பொங்குது
பொன்னாக .





கவிதை எட்டு:

கொத்தாக கருந்துளசி
சத்தாக சலத்தின் மேல் - உன்
பத்து விரல் கண்டு
பசுங்கன்று எண்ணியதே…
வாகாக வந்துண்ண
வாய் வைக்க சிந்திக்க
கருந்துளசி காண்கிலேனே
பெருந்துளசி பேறு  பெற்றேன்
அருந்தவமே யாது செய்தேன்?
பொருந்தி உந்தன் பாதம் சேர்ந்தேன்.


கவிதை ஒன்பது:

முத்து விரல் பத்தைக் காட்டி
முகத்திரையை போட்டுவிட்ட
மாயமென்ன?

பட்டுப் பீதாம்பரம்
சட்டென காட்டிவிட்டாய்.
பொற்சதங்கையிரண்டை
நற்பதமென காட்டிவிட்டாய்.
முகம் மறைத்த மாயமென்ன?

பதம் கண்டால் போதும்
இதம் தானாய் ஊறும் ..
சொல்லாமல் சொல்லவே
முகம் மறைத்து
அகம் திறந்தாயோ?



கவிதை பத்து:

பாதம் மட்டும் பார்த்து
வாதம் ஏதுமின்றி ஏற்கும்
பதம் யாம் பெறவில்லை.

முழுநிலவாய் முகம் கண்டு
முழு மனதாய் அகம் தந்து

கண்ணிரண்டில் கருணை கண்டு
கண்ணனென போற்றி நின்று
செவ்வாய்க் குழலில்
மெய் வாய் மறந்து
காய் கனி துறந்து
போய் வா என்றாலும்
போகாமல் உன் பதம்
பணிந்திடுவோம்..

இன்று நீ முழுமதிமுகம் காட்டிவிடு.

ஒற்றைச் சிலம்பை பற்றி...



ஒற்றைச் சிலம்பை
பற்றி வந்து பார் அதிர  

நீதி கேட்டாய்
வீதியிலே தமிழ் மகளே

சதியென்று தாம் தெரிந்தும்
விதியென்று வாளாவிருந்தனையோ?

கதி கெட்டு நின்றாலும்
எது நியாயமென்று கேட்டனையே
இது வேண்டும் தந்திடுவாய்
எங்குல பெண்டிர்க்கு
தங்கு தடை வென்று வர
மங்காத்தமிழ் மகளே !

கனவுக் குதிரைகள்

கனவுக் குதிரைகள்

கட்டறுந்து ஓடும் கனவுக் குதிரைகள்
காலையில் கண் மலர
சோலையாய் பூந்தோட்டம்  
கையில் தேநீருடன் துணையது
கற்றைத் தாளுடன் கண்ணே நீ
கவிதைகளை காற்றில் கடைந்தெடு
வீட்டினை நான் நோக்குவேன்
காதினிலே தேன் பாய்ச்ச வேண்டும்

காலை பரபரப்பு ..கருத்துடனே
வேலை பல அடுக்கடுக்காய்
சாலை நெரிசல் நெருக்கடிகள்
மூளையோரம் முகிழ்ந்திடும்
கவிதைகளின் அணிவகுப்பு
கனவுக் குதிரைகளீன்ற  
குட்டிக் குதிரைகளாய் கும்மாளமிட

காற்று வெளியிடை கண்ணம்மாவுடன்
காணி நிலங்கேட்ட
முண்டாசுக்கவி எண்ணி  
மூச்சொன்று சீறுதே பொருமலாய்

கனவுக் குதிரையிலே
காலமெலாம் கரைந்தாயே - எம்  
கவியே ..உம்  துணிவு
கலியுகத்தில் எம்மிடத்தில்
கடுகளவும் காணுதில்லையே - நாம்

விற்பனையுலகின் பந்தய குதிரைகளாய்
கற்பனையுலகின் குதிரைகள் ஏதிங்கு?
இரட்டை குதிரை சவாரி கூடுமோ?

எட்டயபுரத்தானே எமை ரட்சிப்பாய் !

கனவே கலையாதே ..

கனவே கலையாதே ..

க..னவு பல நீயும்  கண்டிடு  …
……...வெள்ளிக் காசா  ..கனவென்பது .
ந..னவு மெய்யென நம்பிடு   
……...நாளை உன் பெயர்  ..நவிலும்
வே..கம் மிக கொண்டிட்டால்
………. வீணாய் வீழ்ந்துபடுவாய்

க..லங்கா நெஞ்சாய்
……திட்டம் கொண்டிங்கு
ந..மக்கென பொதுநல
…….எண்ணமிட்டு ..”நானை “
வே..றாய் புறம் தள்ளி விட்டு  

க..ண்டவர் சொன்னதை கடுகி
………..ஏற்றிடாது - அறம்
ந..ன்றென கொண்டவர் பதம்
……...கருத்தேற்றி ஒழுக்கம் ஈகை
வே..ண்டும் கடமை என  உள்
……...அகத்திறுத்தி ..அன்பால்

க..னவது  மெய்ப்பட ..
………கருமமே ..கண்ணாக
ந..டக்கும் வழியென
……….இலக்கதை நோக்க  
வே..ண்டுதல் வேண்டாமை இலான்

 ……...விரும்பி உன் வழி திறப்பான்  

கம்பரின் இறுதிப் பாடல்

கம்பரின் இறுதிப் பாடல்

புலி ஏவி பெருங்கவி கம்பனை
கிலியாக்கி கொல்லத் துணிந்த
புலிக்கொடியோன் ..கவியை
எலியென்று எண்ணினானோ
பழிக்கஞ்சாது பாவியவன்
பொழிந்த அம்பினால் -அறிவு
விழி கெட்டு அவன் குலமே
நலிவுற்று வீழ்ந்துபட நின்றானே



சோழ மன்னன் குலோத்துங்கன் கம்பரைக் கொல்ல ஒரு புலியை ஏவினானாம். ஆனால் அது அவரிடம் அன்பு காட்டி நின்றதாம். அதனால் குலோத்துங்கனே அம்பெய்தான். அது கம்பர் மார்பில் பாய்ந்தது. அப்போது அவர் உயிர்பிரியும்போது சோழர் பரம்பரை அழிய ஒரு பாடலைப் பாடினாராம். இதுதான் அப்பாடல்
”வில்லம்பு சொல்லம்பு மேதகவே ஆனாலும்
வில்லம்பிற் சொல்லம்பு வீறுடைத்து---வில்லம்பு
பட்டுருவிற்று என்னை;என் பாட்டம்பு நின்குலத்தை
சுட்டெரிக்கும் என்றே துணி
[இருவாட்சி 2017 பொங்கல் மலரில் மகுடேசுவரன்]

தகவல் நன்றி: திரு. வளவத்துறையன்

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...