#அகம்400_க(வி)தை#1
காரோடி ..
காருடன் ஓடிக் கொண்டே நடனமாடும் திகில் சவால் (In my feelings challenge) பற்றிய பதிவா..என்று கேட்பவர்கள் ..ஏமாற்றம் அடைவீர்கள்...இது பழைய காரோடி ..கதை..
அது சரி நாடோடிக் கதை தெரியும் இது என்ன காரோடி கதை ..?
இதே குழப்பம் தான் பாவம் கதையில் உள்ள...இனியாவிற்கும்..
கத்தியை கூராக்கிக் கொண்டே “என்னாச்சு ஏன் ரொம்ப கவலையா இருக்கிற ‘ என்றாள் இனியா.
உன் கையில் இருக்குறது தான் காரணம் என்றாள் முல்லை.
கத்தியா? என்றாள் அவள்.
“இல்லை ..சாணை தீட்டுற கல் ” என பதில் வந்தது முல்லையிடமிருந்து.
சாணை தீட்டுற கல்லா ? வியந்தாள் இனியா.
“ஆமாம். இரண்டு கல்லும், நடுவுல இருக்குற அச்சுல எப்படி ஒட்டியிருக்கு ? “- முல்லையின் கேள்வி தொடர்ந்தது.
“ஏதாவது பசையை போட்டு ஒட்டியிருப்பாங்க, எல்லாமே இப்படி தானே இப்போது” - பதில் சொல்லியவாறே ஏன் இந்த கேள்வி இப்போது என்று யோசிப்பதற்குள். ..
“ நீ இன்று ஒரு காரோடி ஆகிவிட்டாய் “ ஏதோ வேற்றுல மொழி போல சொற்கள் உதிர்ந்தன முல்லை வாயிலிருந்து.
என்னவாயிற்று இவளுக்கு என்று நினைத்தவாறே இனியா கத்தியை பத்திரமான இடத்தில் ஒளித்து வைத்து விட்டு வந்தாள்.
முல்லையின் கைகளில் சாணைக்கல் உருண்டு கொண்டிருந்தது. அதை அவள் கூர்ந்து பார்த்தபடி
“ இது பசை போட்டு ஒட்டவில்லை ..அரக்கு வைத்து ஒட்டியிருக்கிறான் காரோடன் “ என்றாள் முல்லை.
இனியாவிற்கு தலை சுற்றி பைத்தியம் பிடிப்பது போலிருந்தது.
என்னாச்சு இவளுக்கு என்று குழம்பியபடி ..பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“ ஏன் அவ்வளவு தூரம் என்னை விட்டுட்டு போனாய்?’” என்றாள் முல்லை.
ஆனால் அவள் பார்வையோ இனியா பக்கம் இல்லை...வேறெங்கோ காற்றில் நிலைகுத்தி இருந்தது.
இனியா, முல்லையின் பிரச்சனையை ஓரளவு யூகித்து விட்டாள். “இவ எங்கிட்ட பேசல...ஏதோ காதல் சிக்கல்” என்று புரிந்து கொண்டாள்.
“எங்கே ..எவ்வளவு தூரம் “ என்ற இனியாவின் இரண்டு வார்த்தை கேள்விக்கு அருவியாய் கொட்டினாள் முல்லை.
“தலையில இருக்கிற பூவெல்லாம் .சிதறி .குதிரை மேல வந்த முரடர்களையெல்லாம் நல்லா சண்டை போட்டு விரட்டுனானே பொதினி மலை அரசன் “ என்றாள் இவள்.
“என்ன ..பொதினி மலையா..” என்று இனியா இழுக்க ..
“பொதினி மலை தெரியாதா ..உனக்கு? அதான் வேலும் வாளும் வச்சுக்கிட்டு வீரமா வேளிர்குலத்தலைவன் ..இருப்பானே அவன் பெயர் கூட நெடுவேள் ஆவி..
அந்த மலையில இருக்குற யானை தந்தமெல்லாம் அறுத்து இருக்குமே ..இப்ப ஞாபகம் வருதா ..? என்றாள் இவள்.
இவளை இவள் வழியிலே போய் சமாளிச்சா தான் உண்டு என்று முடிவு கட்டிய இனியா ” ஆமா..ஆமா..சொல்லு..இப்ப எனக்கு புரியுது “ என்றாள்
“அது சரி .நான் எங்கயோ ரொம்ப தூரம் உன்னை விட்டுட்டு போனேன்னு சொன்னியே..அது எங்கே “ என்றாள் மெதுவாக..
கோபமாக முறைத்தாள் முல்லை . நீ எங்கே போனாய்? நீ தான் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறாயே? என்று கூறிவிட்டு
“பொதினி மலையிலுள்ள சாணை பிடிக்கும் சின்ன பையன் , சாணைக்கல்லும் அச்சும் விலகாமல் இருக்க அரக்கினை தடவி வாள்களையும் வேல்களையும் கூர்மைப்படுத்துவானே..அப்போ என்ன சொன்னான் தெரியுமா? என்று விடுகதை போல கூறி நிறுத்தினாள்.
, “ சாணை தீட்டும் சின்ன பையனா ? என்று இனியா கேட்ட மாத்திரத்தில் முல்லைக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை.
“ காரோடன்* என்ன என் காதலனா…” என்று பொரிந்து தள்ளினாள்.
“ காரோடனா..? என்று இனியா முடிக்கும் முன்னரே ..
“காரோடன் என்றால் சாணை தீட்டுபவன் என்பது கூட மறந்து விட்டாயா நீ ..என்னமோ போ..ஏதோ ஆகிவிட்டது உனக்கு என்று சலித்துக் கொண்டாள் முல்லை..
பாவம் இனியா தலையும் புரியாமல் காலும் புரியாமல் ,” யார் , என்ன கூறினான் என்று நீயே கூறிவிடேன் ..” என்று பரிதாபமாக கூறினாள்.
“ மாறன் கூறினானே ‘“மாறனையாவது தெரியுமா அதுவும் மறந்துட்டியா ..என் அன்புக் காதலன் மணிமாறன் ..என்று கன்னம் சிவந்தாள். பிறகு “அரக்கு பூசி ஒட்ட வைத்த சாணைக்கல் போல் உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று சொன்னான் ‘ ஆனா இப்போ காசும் பணமும் முக்கியம்னு என்னை விட்டுட்டு ரொம்ப தூரம் போய்ட்டானே “ ..என விசும்பலாய் முடித்தாள் இவள்.
‘பார்த்தியா எப்படி நான் மெலிஞ்சுட்டேன் பார் ..அவன் என்னை விட்டுட்டு போனதால ..” கன்னத்தில் வழிந்த நீர் கானலாகியது வெப்பத்தினால்.
“
‘பாலைவனத்திற்கா ..” இனியா முடிக்கும் முன் முல்லை வெடித்தாள் ...
..
“ வனமா ..அது..பாலைநிலம் பாழ் வெறும் ..பாழ்..நிலம் ..” செந்தமிழுக்கு மாறின சொற்கள்..
‘நிலத்தை பிளக்கும் நெருப்பால் பச்சை வயலெல்லாம் எரிந்து ...அதன் தாக்கத்தை தாங்க முடியாத மரங்கள் காய்ந்து பாறைகள் கூட காய்ந்து வெடிக்கும்படி இருக்கும் இடம்..அங்குள்ள காய்ந்த சுனைகளில் நெல்லை அள்ளி போட்டால் பொரியாக வெடித்து விடும் ..கொள்ளைக்காரர்கள் கூட அங்கு யாரும் வராததால் .வாழ வழியில்லாத பாழ் நிலம் ..சூறைக்காற்று சுழன்று சுழன்று அடிப்பதில் முருங்கைப் பூக்கள் எல்லாம் நாலாபக்கமும்
கட ற்கரையோரம் ஒதுங்கும் வெள்ளை நுரை போல அங்கும் இங்கும் அலைந்து அல்லாடும்..எல்லையே இல்லாத பெரிய பொட்டல் காடு ..” பொல பொலவென கண்ணீர் பெருக்குடன் தொடர்ந்தாள்..
‘அந்த கடுங்காட்டை எப்படித் தான் கடந்தானோ..நானறியேன் தோழி...நீயறிவாயோ ..தோழி..நீயறிவாயோ ..? அரற்றினாள் ..
சாணைக்கல்லும் அரக்குமாய் வாழ வேண்டிய நாங்கள் இன்று
வீணாய் போனோமே என்று தேம்பினாள் முல்லை.
அவளுக்கு அத்தனையும் புரிந்தது நேற்று நடத்திய அகநானுற்றுப் பாடலின் பாதிப்பு என்று….
அது சரி ..ஏதோ பட்டப்பெயர் வைத்தாளே எனக்கு..” என்ன காரோட்டியா ..இல்லையில்லை காரோடி ..”
அது என்ன .காரோடி ….ஆஹா ...காரோடன் ..ஆண்பால் என்றால் காரோடி பெண்பால்….காதலிப்பவர்களுக்கு நட்பாயிருக்குறது இருக்கே ...என் பேரு எனக்கே மறந்துடும்...போலிருக்கே ..இன்னும் ஒருவாரம் இந்த பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்…
முல்லை நான் வெளியூருக்கு போறேன் ..அடுத்த வாரம் தான் வருவேன்…….
* * காரோடன் - கருவிகளுக்கு கூர்மை ஏற்றுபவர் (https://ta.wikisource.org)
(அகநானூற்று பாடல் #1 ஐ அடிப்படையாகக் கொண்டு கதை வடிவமாக எழுதிய முயற்சி )
நன்றி: sangacholai.in
Learnsangamtamil.com
#அகம்400_க(வி)தைகள்#1
#ராஜி_வாஞ்சி
கமெண்டில் மூலபாடல்
குறிப்பு: இந்தப் பாடலின் கவிதை வடிவம் அடுத்த பதிவில்……..