#புதுக்கவிதை வடிவில்
சரிந்த மலை
விரிந்த இலை
செழித்த வாழை
பழுத்த குலை
பாரம் தாங்காது
ஓரமாய் சாய்ந்து
விழுந்து சிதறியது
குழம்பிய சுனையில்
தேனாய் இனிக்கும்
வீணான பலாவும்
பாறையில் மோதி
வேறாய் சுளைகள்
வாழையின் மீது
வீழ்ந்து கலந்து
நாள்பட ஊறி
நீள்சுனை நீரோ
பால் போல்
தேறலாய் தெளிய
ஆண் குரங்கொன்று
தேன்சுவை நீரை
திகட்ட திகட்ட வாயில்
புகட்டி அருந்திட
அகமெலாம் திளைத்து
புகவில்லை புறத்தே
மிளகுக்கொடி மேலேறிய
அழகு சந்தனமரம் தேடவில்லை
மனதை மயக்கும் பூமணம்
சதிராடும் மலைச் சாரலிலே
தூக்கம் கண்ணை
தூக்கிச் செல்ல
உருண்டு உறங்கும் குரங்கினம்
உரு பலவுடைய விலங்குக்கூட்டம்
அலைந்து திரியாது அரிய இன்பம்
மலையில் கிடைக்கும்
நிலைத்த மலை நாடா..
எண்ணாத இன்பங்கள்
எண்ணிறந்து பெறும் உனக்கு
எண்ணிய முடிப்பதென்ன அரிதா?
மன்னா நீ செப்பிடுவாய்..
இணையில்லா இளமயிலாள்
பணைத்தோள்கள் தடுத்தாலும்
பாவிமகள் மனம் உன்னை
மேவி வந்து தாவிடுதே!
தாவும் நெஞ்சை தடுத்து விட
காவலுக்கு கரையிட்டு
தந்தையவர் தாழ் போட
சிந்தையிலே சிறை தப்ப
ஒற்றரையும் ஓரங்கட்ட
சிற்றிடையாள் எண்ணி பல
திட்டங்கள் தீட்டிடத்தான்
வேண்டுமென்றோ?
ஏன் என்று எண்ணிடாயோ?
பட்டப்பகல் தன்னில் கண்ணில்
பட்டிடக் கூடுமோ இனி?
நட்டநடு இரவும் போய் யாமமது
விட்டவோர் வழியாகுமன்றோ?
வேங்கைமரக் கிளையெல்லாம்
தாங்கி நிற்கும் வாசமலர்
எங்கெங்கும் புதராக
இங்கு பசுமை கண்டிலையோ?
வெள்ளை வெளிச்சமாக வெகுநேரம்
நில்லாது ஓடும் நிலவும்
சொல்லவில்லையோ கதைகள் பல..
எளிமையாக்கம்: ராஜி_வாஞ்சி
பாடியவர்: கபிலர்
திணை : குறிஞ்சித் திணை
திணை : குறிஞ்சித் திணை
மூலப்பாடல் அகநானூறு#2
#2 குறிஞ்சி கபிலர் கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை ஊழ்_உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு பாறை நெடும் சுனை விளைந்த தேறல் அறியாது உண்ட கடுவன் அயலது 5 கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் குறியா இன்பம் எளிதின் நின் மலை பல் வேறு விலங்கும் எய்தும் நாட குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய 10 வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள் நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்_மாட்டு இவளும் இனையள் ஆயின் தந்தை அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி கங்குல் வருதலும் உரியை பைம் புதல் 15 வேங்கையும் ஒள் இணர் விரிந்தன நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே
நன்றி: sangacholai.in
No comments:
Post a Comment