ஆதலால் காதல் செய்வீர் -- காதல் கவிதை (சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா)
என்னை மறந்தனையோ ?
என் இருவிழிகள் அழுதிட
முன்னெடுப்புகள் செய்ய
பின்புலத்தில்
மின்னலென
எண்ணமது ..
வண்ணமயிலாய்
கன்னமிட்டு மனதில்
திண்ணமாய் நுழைந்தது
என்னருமை கண்ணின் வழியன்றோ .
சன்னமாய் கலங்கினாலும்
பின்னமாய் உரு மறைய
எந்நாளும் விடுவேனோ ?
மண்ணாகிப் போனாலும்
விண்மீனே விழியிரண்டும்
இன்பமாய் நீ வாழும் கோயிலடி ..
இமையென்றும் கண்ணிற்கு
சுமையாகுமா ..கண்ணீரால்
சுமையான விழிதன்னை
இமை கொண்டே பூட்டிடுவேன்
என்னுயிராம் உன்னுயிரை
தண்குளிர்த் தாமரை
என்னிதயத்தில் பொதிந்திடுவேன்
என்னை காரிருள் சூழத்தான்
கண்மணியே
விட்டிட மாட்டாயென
கட்டியம் கூறும் நெஞ்சத்தில்
பட்டயமிட்ட
பட்டத்தரசியன்றோ ..என்னுள்
பட்டுத் தெறிக்கும் எண்ணங்கள்
திட்டமாய் உன் சொல்வனமன்றோ ?
மொத்தமாய் உள்ளமதை
குத்தகைக்கு கொண்டதனால்
பித்தனென் செயலல்ல
சித்தத்தில் தோன்றுமனைத்தும்
நித்திய தேவதை உன்
சத்திய தேவ வாக்கன்றோ ?