இரண்டு மனம் வேண்டும் இறைவா
இலக்கணம் இனிதாய் ஏற்று
மரபுக் கவியிங்கு
மகிழ்வாய் இயற்றிட ஒன்று
மீமொழி விதி கற்று
மீட்டிடும் திறன் பெற்றிட
மீண்டும் கேட்கிறேன்
மற்றொரு மனம் நன்று
தெம்மாங்கை திகட்டாமல்
தித்திப்பாய் தந்திடவே
திட்டாமல் தந்துவிடு
மனமொன்றை
கானாப்பாட்டை
தேனாய் பாட
இன்னொரு மனம்
வேண்டுமெனக்கு
துளிப்பாவை துள்ளலாய் முடிக்க
தொடர் துளிப்பாவை தொட்டு தொடர
நீள் துளிப்பாவை நீட்டவும்
நகைத்துளிப்பாவை நயமாய் நவிலவும்
உரைத்துளிப்பாவை உரக்கச் சொல்ல
இயைபுத்துளிப்பாவை இடராமல் இயற்றவும்
ஈறுதொடங்கித் துளிப்பாவை இசையொடு இழைக்க
ஓவியத் துளிப்பாவை காவியமாக்க
ஓ இறைவா ..இரண்டு மனம் போதாது
ஓராயிரம் எதற்கும் தந்துவிடு
லகரத்தில் கொடுத்தாலும்
அகரத்தில் திளைத்திடவே
அதுவும் தான் போதுமோ?
No comments:
Post a Comment