இரவல் வெளிச்சம் …
பரவலாய் உண்டு பாரினிலே
பகலவன் வெளிச்சம் வாங்கி
பால் நிலா பொழிவதுண்டு ..
கதிரவனிடம் கடனொளி பெற்று
சதிராடும் சந்திரமுகி
விதிர்க்கும் வெம்மை விடுத்து
விரிக்கும் தண்மை ஒளி
சிறக்கும் சிந்தையுமே மதிவொளியால்
சிரிக்கும் கவியுள்ளம் ..
தன்னொளி தந்தது தரணியில்
கண்மணியாம் கதிரவன் என
விண்மதி மறந்திடா மதி கொண்டு
மென்மதியால் செருக்கழித்தால்
சுட்டும் விழிச் சுடராய்
சூரிய சந்திரரும்
பேரியக்கத்தின் பேறாய் வந்திடுவர்.
மாந்தர் வாழ்வதனில்
இரவல் இல்லா வெளிச்சமுண்டோ ? - இப்
பரவெளியில் ..? அத்தனையும்
இரவலும் அதன் வழி
பரவலுமன்றோ?
சுத்தவெளியொன்றே ..சுகமான
நித்தியமன்றோ ...சுற்றும் அனைத்தும்
மத்திடைப்பட்ட ...துகளன்றோ ?
நேற்று நீ இரவல் கொண்டாய் ..
காற்று வழி கடந்து சென்றாய்
போற்றும் உயர் தன்மை கொண்டாய்
வேற்று மனிதனுக்கு இரவல் தந்தாய்
இன்று இரவல் பெற்றவன்
நன்றென நால்வர்க்கு வெளிச்சமாவன்
நாளைப் பொழுதினாலே ..
எங்கிருந்து யாது கொணர்ந்தோம் ?
இங்கிருந்து யாதும் உற்றோம்
இங்கதனை பங்கிட்டு விட்டோம் - இஃது
நன்கெனவே வாழ்தற்கு சான்றன்றோ?
No comments:
Post a Comment