நள்ளென்ற நடுச்சாமம்
புல்லும் புள்ளினமும்
மெல்லத் துயிலும் நேரம்
மக்களும் மாக்களும்
சொக்கியுறங்கிட
நிற்காமல் நீந்தும் நிலவும்
நிற்கலாமா சற்றென
கீற்றிடைக் கிறங்கும்
சொல்லற இருவென சொல்லி
நில்லாது ஓடி ..
தள்ளாடி உருளும் உலகும் …
துள்ளல் மறந்து
மெல்லடி வைக்கும்
அலை கடலும் ..யானும்
நிலை இல்லாது நின்றோமே
வலை மீது வீழ்ந்தேனே
“நள்ளென் றன்றே யாமம்” எனத் தொடங்கும் #6. குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
பாடியவர்: பதுமனார்
உரை: நடு இரவு இருள் மிகுந்ததாக உள்ளது. மனிதர்கள் அனைவரும் பேசுவதை நிறுத்திவிட்டு, இனிமையாக உறங்குகின்றனர். அகன்ற இடத்தையுடைய இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் வருத்தமின்றி உறங்குகின்றன.நான் ஒருத்தி மட்டும் (உறுதியாகத்) தூங்காமல் இருக்கிறேன்.
நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே
#Rajikavithaigal
நன்றி: முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com
No comments:
Post a Comment