Saturday, May 27, 2017

ஒட்டகம் மேயுற ... குறுந்தொகை #16

Kurunthogai_16 (version 1)_Ullor_kollo?

#Rajikavithaigal

ஒட்டகம் மேயுற  ...நாட்டுப்பக்கம்
கட்டு கட்டா ….துட்டு பாக்க
துணிஞ்சு போன மச்சான்

தெனம்  சிறுக்கியுந்தான்
மனம் மறுகி கெடக்கேனே
என்னய நினைச்சுத் தான்
பாப்பானோ என் ஆச மச்சான்

பனைமரம் முளைச்ச காடு
கள்ளிச்செடி நெறஞ்ச காடு - செவத்த
பல்லி சத்தம் கொடுக்கையிலே
கள்ளி உன்ன நினைப்பானே
சொல்லிகிட்டே நடந்து போனா
சுள்ளி பொறுக்குற என்
சோட்டுக்காரி.




*“உள்ளார் கொல்லோ தோழி” என்ற குறுந்தொகைப் பாடலை  அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
(பாடியவர்:பாலை பாடிய பெருங்கடுங்கோ)


பிரிந்த காதலனை எண்ணிக் காதலி வருந்துகிறாள். அவளுக்குத் தோழி சொல்லும் மறுமொழியாக இந்த பாடல் அமைந்துள்ளது.  



Kurunthogai_16 (version 2)

#Rajikavithaigal

விழி பேசி
வழி கண்டோம்
கிலி நீங்கி வாழ - பொற்
கிழி காண - கடு
வழி பாலை  கடந்தான்
மொழி பறித்த மோகனன்
பிழியும் மனதை மறந்தானோ?
தோழி நீ செப்பிடுக !

வழிப்பறி கள்வர்
கழியுடன் அம்பை பாறையில்
செழிக்கத்  தீட்டி நகத்தால்
ஒலிக்க செய்யும் ஓசையாய்
நெளிந்தோடும் செங்கால் பல்லி
களிக்கவோர் பேடை தேடியழைக்க  
வலிக்குமே  வஞ்சிக் கள்வனுக்கும்
உளியாய் நெஞ்சில் கள்ளிக்காட்டில்

*“உள்ளார் கொல்லோ தோழி” என்ற குறுந்தொகைப் பாடலை  அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
(பாடியவர்:பாலை பாடிய பெருங்கடுங்கோ)


பொருளீட்ட தன்னைப் பிரிந்த சென்ற கணவன்  தன்னை எண்ணிப் பார்ப்பானோ எனக்  வருந்தும் இளம்பெண்ணிற்கு , அவள் தோழி சொல்லும் மறுமொழியாக இந்த பாடல் அமைந்துள்ளது.  



தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com


குறுந்தொகை#16
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.


No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...