Kurunthogai #14
ஆணின் நாணம்
#Rajikavithaigal
பனை ஏறி விட்டேன் ..
மடல் வெட்டி விட
உனை மனதில் பூட்டியதால்
மடமங்கை உடன் சேர
நினைந்து நினைந்து உருமாறி
உடல் சோர்ந்து ..
ஊர் சிரிக்க நின்றாலும்
திடல் வந்து திடமாய்
தேர் இழுப்பேன் குருதியோட - சொல்
விடம் விழுங்கி நிற்பேன்
கார்மேகம் கண்ட
கான மயிலென இருந்தோமே
நார் மணக்கும் சரமுல்லை
நாணும் வெண்பற்கள் ..
வேரில் பழுத்த பலா
காணும் அமிழ்து செவ்வாய் ..
கூறும் சொற்களோ குறைவு
மணக்கோலம் கொண்டு
ஊர் முன்னே கரம் கோர்த்து
நானும் மிதந்து ..
ஊர்வலம் போகையிலே ..
நாணுவேனே ..நறுமுகையே ..
“அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த” எனத் தொடங்கும் #14.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
பாடியவர்: தொல்கபிலர்
இரு உள்ளங்கள் கலந்த பின்னர், தலைவி தாயின் கட்டுக்காவல் மற்றும் கண்டிப்பை தாண்ட முடியாது தவிக்கிறாள். அவளின் பெற்றோர்களின் சம்மதம் பெற ஆண் கடைசியாக செய்யும் யுக்தி மடலேறுவது. மடலேறுவதாக தலைவன் தெரிவிக்கிறான்.
மடலேறுவது நாணத் தகுந்த செயல் என்று கருதப்பட்டது. தான் நாணம் இழந்தாலும், அவளை மணந்து மகிழ்ச்சியுடன் உடன் செல்லுகையில் அந்த நல்லவளின் கணவன் என்று சொல்வதை கேட்கும் போது நாணத்தை மீண்டும் பெறுவேன் என்பதாக பாடல் அமைந்து உள்ளது.
படம் (நன்றி) : http://www.tamilvu.org
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com
அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்
கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவன் இவனெனப்
பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே.
No comments:
Post a Comment